ஞாயிறு, 27 ஜூலை, 2014

                                                                     உலகம் 
ஏ.கே.கான் 1939ம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 1945ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி முடிவுக்கு வந்த நேரம், உலக நாடுகள் பலவும் போரால் சின்னாபின்னாவாகி அவற்றின் பொருளாதார நிலைமை சிதிலமடைந்து போன நிலை.. உலகமே கூடி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கியதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும் போரால் சேதமடைந்த கட்டமைப்பை மீண்டும் உருவாக்கவும் 1945ம் ஆண்டு டிசம்பரில் உருவாக்கியது தான் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியம் எனப்படும் International Monetary Fund அமைப்பும். 188 உலக நாடுகள் இணைந்து அவரவர் சக்திக்கு ஏற்ப பணத்தைப் போட்டு உருவாக்கியது தான் இந்த வங்கி. ஆனால், இந்த வங்கிக்கு இதுவரை 12 தலைவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே அமெரிக்கர்கள் தான். வங்கியின் தலைமையகம் இருப்பதும் வாஷிங்டனில். ஆரம்பத்தில் உலக வங்கி முழுக்க முழுக்க ஐரோப்பிய நாடுகளுக்கே நிதியுதவி அளித்து வந்தது. பின்னர் ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் ரஷ்யா தனது ஆதிக்கத்தை பரப்ப முயல, ஐரோப்பிய நாடுகளுடன் ஒன்றிணைந்து அமெரிக்கா European Recovery Program என்ற ஒரு புதிய உதவித் திட்டத்தை தொடங்கியது. Marshall Plan என அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்காவே நேரடியாக நிதியுதவி வழங்க ஆரம்பித்தது. 

இதையடுத்து தங்களது ஐரோப்பிய கஸ்டமர்கள் அனைவரும் காலியான நிலையில் தான் உலக வங்கி, ஐரோப்பா அல்லாத பிற நாடுகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. இது தான் உலக வங்கியின் 'பழைய வரலாறு'. மேலும் உலக வங்கியிடம் முதன்முதலில் கடன் கேட்டவை பிரான்ஸ், போலந்து, சிலி ஆகிய நாடுகள் தான். இதில் பிரான்சுக்கே முதலில் கடன் தருவோம் என்றார் அப்போதைய உலக வங்கித் தலைவரான அமெரிக்கர் ஜான் மெக்லாய். அத்தோடு அமெரிக்க மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தது. கடன் வேண்டுமென்றால் பிரான்ஸ் அரசில் உள்ள கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்க வேண்டும் என்றது. இதற்கு பிரான்ஸ் ஒப்புக் கொண்டதோடு கம்யூனிஸ்ட்டுகளை கழற்றிவிட்டுவிட்டு கடனை வாங்கிக் கொண்டு போனது. இது தான் உலக வங்கியின் 'அரசியல் வரலாறு'. அதே போல இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச அளவில் நாடுகளின் நிதி செலுத்தும் முறைகளை (International payment system) சீரமைக்க உருவாக்கப்பட்டது தான் சர்வதேச நாணய நிதியம். பெரும்பாலும் ஏற்றுமதி- இறக்குமதியில் அமெரிக்க டாலர்களே புழக்கத்தில் உள்ளதால், டாலர் புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவே இதை இன்னும் பல சோஷலிஸ நாடுகள் பார்க்கின்றன. இதன் தலைமையகமும் வாஷிங்டனில் தான். உலக வங்கியின் தலைவர்களாக அமெரிக்கர்களே இருந்து வருவது போல இந்த அமைப்பின் தலைவர்களாக ஐரோப்பியர்களே இருந்து வருகின்றனர்

இந்த அமைப்பு சர்வதேச வர்த்தகம், நாடுகளின் டாலர்கள் கையிருப்பு ஆகிய விஷயங்களில் உதவுவதோடு டாலர் பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகளுக்கு தங்களது இறக்குமதிக்காக கடன் கொடுத்தும் உதவுகிறது. ஆனால், இங்கேயும் கம்யூனிஸ்டுகளை அடக்குகிறோம் என்று கியூபாவை விரட்டிவிட்டனர். அதே போல சீனாவின் இடத்தை தைவானுக்குத் தந்தனர். ஆனால், சீனா கடும் சண்டை போட்ட பின்னரே மீண்டும் இடம் கிடைத்தது. இவ்வாறாக உலக வங்கியிலும் சர்வதேச நாணய நிதியத்திலும் 188 நாடுகள் இடம் பெற்றிருந்தாலும், இந்த அமைப்புகளின் பெயரில் தான் 'உலகம்', 'சர்வதேச' ஆகிய வார்த்தைகள் உள்ளனவே தவிர, உண்மையில் இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நலன்களையே மையமாகக் கொண்டு செயல்படுவதாக புகார்கள் உள்ளன. வளர்ந்து வரும் நாடுகள் இந்த அமைப்புகளின் நிதியுதவியை சார்ந்தே இருந்ததால், உலகளவில் அமெரிக்க, ஐரோப்பிய ஆதிக்கம் தடையில்லாமல் பரவியது.
ஆனால், எப்போது சீனாவும், இந்தியாவும், உடைந்து போன சோவியத் யூனியனின் ரஷ்யாவும், பிரேசிலும் தங்களது பொருளாதார சீர்திருத்தங்களில் இறங்கி free economy, market economy என்ற பேண்ட், சட்டையைப் போட்டுக் கொண்டனவோ, அப்போதே அவற்றின் அடிப்படை பொருளாதார நிலைமைகள் மாறிவிட்டன. இப்போது இந்த நாடுகளில் சந்தைகளில் அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி 'சப்ளை- டிமாண்ட்' தான் ராஜா. காசைப் போடு, தயாரிச்சுக்கோ, வித்துக்கோ, காசு இருந்தா வாங்கிக்கோ, டிமாண்ட் ஜாஸ்தியா இருந்தா விலையைக் கூட்டிக்கோ, நாங்க (அரசு) எதுவும் கேட்க மாட்டோம். இது தான் மார்க்கெட் எக்கானமி. இந்த வகையான பொருளாதாரத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் அமெரிக்கா ஆகியவை இறங்கி தங்களை பொருளாதாரரீதியில் ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டன. ''ஐயா, துரை, எஜமானே, எங்க மக்களுக்கு சாப்பாடு போட கோதுமை இறக்குமதி செய்யக் கூட காசு இல்லை'' என்று உலக வங்கியிடம் கடனும், சர்வதேச நாணய நிதியத்திடம் டாலரும் கேட்ட இந்தியாவின் நிலைமை எல்லாம் மலையேறிவிட்டது. ''நாட்ல கார்கள் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு, பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யவும் மக்களுக்கு தங்கம் இறக்குமதி செய்யவுமே எல்லா டாலரும் செலவாயிருது'' என்று 'சலிப்பு' எக்கானமி நிலைக்கு வந்துவிட்டது இந்தி